Ads

விரைவில் இடைத்தேர்தல் திருச்சி மேற்கு தொகுதியில் மீண்டும் பரபரப்பு

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை, பதவியேற்ற ஒரு வாரத்திலேயே விபத்தில் சிக்கி இறந்ததையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ளது. தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அத்தொகுதில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளில், திருச்சி மேற்கு தொகுதி வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றுள்ளது. 1951ம் ஆண்டு முதல் முதலாக சட்டசபை தேர்தலை சந்தித்த இத்தொகுதியில், இதுவரை ஆறு முறை தி.மு.க.,வும், ஐந்து முறை அ.தி.மு.க.,வும், மூன்று முறை இந்திய பொதுவுடமை கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2006ல், நடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட நேரு, வெற்றி பெற்று அமைச்சரானார். 2008ல், நடந்த தொகுதி சீரமைப்புக்கு பின் சில மாற்றங்களுடன் திருச்சி 2வது தொகுதி, மேற்கு தொகுதியாக மாறியது.
கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் மரியம்பிச்சையும், தி.மு.க., சார்பில் நேருவும் போட்டியிட்டனர். இதில், மரியம்பிச்சை, 7,179 ஓட்டு வித்தியாசத்தில் நேருவை வீழ்த்தி, சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சரானார்.

"நேருவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது' என்ற தோற்றத்தை மரியம்பிச்சை உடைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரியம்பிச்சை கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். பதவியேற்ற ஒரு வாரத்திலேயே அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால், திருச்சி மேற்கு தொகுதியில் இன்னும் ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்தல் கமிஷன் விதிப்படி எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ள தொகுதிகளில், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுக்க வேண்டும். இடைத்தேர்தல் தேதி குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, 45 நாள் கழித்து தேர்தல் நடத்தப்படும். பிற மாநிலங்களில் எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகள் காலியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இந்த நடைமுறை பணிகள் முடிய மூன்று மாதம் ஆகும்' என்றார்.

யார் வேட்பாளர்?

அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால், மீண்டும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, "சீட்' கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மரியம்பிச்சையின் மூத்த மகன் ஆசிக்மீரானுக்கு, 24 வயது தான் ஆகிறது. எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட, 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பதால், அவருக்கு, "சீட்' வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அவரது குடும்பத்தில் யாரும் போட்டியிடவில்லை எனில், பேராசிரியர் சிராஜூதீன், கவுன்சிலர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பாலசுப்பிரமணியன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 04:55:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for விரைவில் இடைத்தேர்தல் திருச்சி மேற்கு தொகுதியில் மீண்டும் பரபரப்பு

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h