தங்களுடைய அரசியல் மற்றும் பணபலம் வைத்து சாட்சிகளை கலைத்து விசாரணையில் உள்ள "ஸ்பெக்ட்ரம்' வழக்கை திசை திருப்ப அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், கனிமொழி மற்றும் "கலைஞர் டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக, டில்லி ஐகோர்ட் நீதிபதி அஜீத் பரிஹோக் நேற்று அறிவித்தார். இதனால், தொடர்ந்து திகார் சிறையில் கனிமொழி இருக்க நேரிடும்.
கனிமொழியும்,"ஸ்பெக்ட்ரம்' வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முன்னாள் அமைச்சர் ராஜாவும், ஒரே அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள். அந்த கட்சி, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தங்கள் அரசியல் மற்றும் பணபலம் வைத்து சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதால், இவர்களுக்கு இந்த சமயத்தில் ஜாமின் வழங்குவது சரியான முடிவாக இருக்காது என்று கூறி நீதிபதி பரிஹோக், வழக்கை தள்ளுபடி செய்தார்.கனிமொழி, சரத்குமார் ஆகியோரது ஜாமின் வழக்கை, முன்னர் விசாரித்த சி.பி.ஐ., நீதிபதி ஓ.பி.சைனி, மே மாதம் 20ம் தேதி அவர்களது மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கடந்த 20 நாட்களாக டில்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.டில்லி ஐகோர்ட் இப்பொழுது விடுமுறையில் இருந்தாலும், கனிமொழியின் ஜாமின் தீர்ப்பை வழங்குவதற்காக ஐகோர்ட் நீதிபதி, கோர்ட்டுக்கு வந்தார்.
தீர்ப்பு காலை 10:30 மணிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. 9:30 மணிக்கெல்லாம் ராஜாத்தி, தி.மு.க., எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி மற்றும் பலர், 30ம் நம்பர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.சரியாக 11 மணிக்கு, கோர்ட் அறைக்கு நுழைந்த நீதிபதி பரிஹோக் தனது 37 பக்க தீர்ப்பை அளித்தார். ஜாமின் தர மறுத்து தீர்ப்பு கொடுக்கப்பட்ட சில வினாடிகளில், தி.மு.க., தலைவர்கள், கோர்ட்டை விட்டு வெளியேறினர்.
பரிஹோக் தனது தீர்ப்பில் கூறியதாவது:ஜாமின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, குற்றவாளிகள் மீது போடப்பட்ட சாட்சியங்களின் தன்மையை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சாட்சியங்களில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதா, இல்லையா என்பது நீதிபதிகளின் அடுத்தகட்ட வேலையாகும். ஆகவே, இந்த வழக்கின் தன்மையை ஆராய்ந்து தான், இந்த முடிவை எடுத்துள்ளேன்.கனிமொழியும், சரத்குமாரும் "கலைஞர் டிவி'யில் முக்கிய நிர்வாக பொறுப்பில் உள்ளனர். இந்த வழக்கின் சாட்சிகள் பெரும்பாலும், "கலைஞர் டிவி'யின் தொழிலாளர்கள். கனிமொழியும், சரத்குமாரும் தங்கள் பதவியையும், அதிகாரத்தையும் உபயோகித்து சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருக்கிறது. ராஜா, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக 2007ம் ஆண்டு பொறுப்பேற்கும் போது தான் தி.மு.க., சன் "டிவி'யுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டு, "கலைஞர் டிவி'யை உருவாக்கியது. "கலைஞர் டிவி'க்கு பல்வேறு மத்திய அமைச்சகங்களிலிருந்து ஒப்புதல் பெறுவதற்கும், டாடா ஸ்கை டி.டி.எச்.,ல் "கலைஞர் டிவி'யை சேர்ப்பதற்கும் ராஜா முயற்சி எடுத்துள்ளார்.
ஊழல் பணம் என்று கருதப்படும் 200 கோடி ரூபாய், டி.பி.ரியாலிடி கம்பெனிகளுள் ஒன்றான டைனமிக்ஸ் கம்பெனியிலிருந்து "கலைஞர் டிவி'க்கு, பல்வேறு கம்பெனிகள் மூலமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து, "கலைஞர் டிவி' கடன் வாங்கியதாகவும், அதை திருப்பிக் கொடுத்தது ஆகியவை , சி.பி.ஐ., இவ்விஷயத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் நடந்தன. டி.பி.ரியாலிடியின் சக கம்பெனிகளுக்குள் பணம் பரிமாற்றம் செய்து, "கலைஞர் டிவி'க்கு 200 கோடி ரூபாய் வழங்கியதற்கு எந்தவித எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. பண பரிமாற்றம் குறித்து "கலைஞர் டிவி'க்கும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் போட்ட ஒப்பந்தங்களின் நகல் தான் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. "கலைஞர் டிவி', சினியுக் பிலிம்சிடம் கடன் வாங்கியதாகவும், அதை வட்டியும், முதலுமாக திருப்பியதாக கூறுவது, "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் ஆதாயம் அடைந்த ஸ்வான் கம்பெனி தனது சக கம்பெனிகள் மூலம், 200 கோடி ரூபாய் "கலைஞர் டிவி'க்கு கொடுத்த லஞ்சப் பணத்தை மூடி மறைக்க எடுத்த நாடகமாகும். ஸ்வான் டெலிகாம் மற்றும் பல தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கு, "ஸ்பெக்ட்ரம்' வழங்கியதில் மத்திய அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ.,யின் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகளிலிருந்து, "கலைஞர் டிவி' பெற்ற 200 கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை வாங்கியதிலிருந்தும், அதை மறைக்க எடுத்த சதி திட்டங்களிலும் கனிமொழியும், சரத்குமார் ஆகியோரது பங்கு இருக்கிறது என்று கருதுகிறேன் . வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதால், இந்த சமயத்தில் கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமின் வழங்குவது சரியான முடிவாக இருக்காது. ஆகவே, அவர்களது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி பரிஹோக் கூறினார்.
கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு தீர்ப்பைக் கேட்டதும் அவரது தாய் ராஜாத்தி, கண்கலங்கினார். உடன், டி.ஆர்.பாலு எம்.பி.,யும் இருந்தார். நிருபர்களிடம் பாலு கூறும்போது, "ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட் செல்வோம்' என்றார்.