Ads

கனிமொழி ஜாமீன் மனு மீதான உத்தரவு: உயர்நீதிமன்றம் நிறுத்திவைப்பு


புதுதில்லி, மே.30: 2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை சிபிஐ நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கியது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக, பாட்டியாலா வளாகத்துக்கு குஷ்பு உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில கட்சிப் பிரமுகர்களும் கனிமொழியைக் காண நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் அவர்கள் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் 24ம் தேதி நீதிபதி அஜித் பரிகோகே முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரிகோகே அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி ஜாமீன் குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஜாமீன் குறித்த தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

இதேபோன்று 2ஜி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஓ.பி.சைனி இன்று காலை தள்ளுபடி செய்தார். கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடியை பணப் பரிவர்த்தனை செய்ய கரீம் மொரானி உதவிசெய்தார் என்றும் அதற்காக ரூ 6 கோடியைப் பெற்றார் என்றும் சிபிஐ அவர் மீது குற்றம்சாட்டியது. அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 10:49:00 PM. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for கனிமொழி ஜாமீன் மனு மீதான உத்தரவு: உயர்நீதிமன்றம் நிறுத்திவைப்பு

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h