கலப்பட அப்பளம் விற்பனை கடையினருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்
news 5/30/2011 12:25:00 PM
ஈரோடு: ஈரோட்டில் கலப்படம் செய்த வண்ண அப்பளம் விற்ற கடையினருக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பிரப் ரோட்டில் உள்ள டீம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கடையில், கடந்த மாதம் எட்டாம் தேதி உணவு ஆய்வாளர் கொண்டல்ராஜ் ஆய்வு செய்து, குடல் அப்பளம் என்றழைக்கப்படும், பல வண்ணங்கள் கொண்ட அப்பள பாக்கெட்டுகளை உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினார். ஆய்வில், மேற்படி குழல் வடிவ அப்பள பாக்கெட்டுகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வண்ணக்கலவைகள் சேர்க்கப்பட்டு கலப்படம் செய்யப்பட்டதென தெரியவந்தது. அதன்பேரில், கடை விற்பனையாளர் அனீஸ் ரஹீமான், கடை உரிமதாரர் முஹமது ஷெரீப் மற்றும் பங்குதாரர்கள் மீது, பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் உத்தரவுப்படி, ஈரோடு ஜே.எம்.,2 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேற்படி அப்பள பாக்கெட்டுகளை விற்ற கடை விற்பனையாளர், உரிமதாரர், முகமது ஷெரீப், பங்குதாரர்கள் உள்பட எட்டு பேருக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது, என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.