மகேந்திரகிரி கிரையொஜனிக் என்ஜின் மையம் விரைவில் செயல்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்
feature, sciencenews 6/18/2011 09:23:00 AM
நெல்லை ஜூன்-18 - நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள கிரையொஜனிக் என்ஜின் சோதனை மையம் அடுத்த 2 மாதங்களில் செயல்படத்துவங்கும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திரவ இயக்கமையத்தில் ராக்கெட் தொழில் நுட்பத்தின்விரிவாக்கம் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று காலை துவங்கியது.
இக்கருத்தரங்கிற்கு திரவ இயக்க அமைப்பு மையத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவனந்தபுரம் இந்திய ஏரோநாட்டிக்கல் சங்கத்தலைவர் ரவீந்திரநாத் வரவேற்றார். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் வீரராகவன் கருத்தரங்கு மலரை வெளியிட்டார்.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் கேப்டன், திரவ இயக்க அமைப்பு மைய முன்னாள் இயக்குனர் முத்துநாயகம், இந்திய ஏரோநாட்டிக்கல் சங்க கவுரவ செயலாளர் அசோக்பூஷன், திரவ இயக்க அமைப்பு மைய இணை இயக்குனர் கணேசன், உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
கருத்தரங்கிற்கு பின்னர் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு ஜூலை இரண்டாவது வாரம் தகவல் தொடர்புக்கான செயற்கை கோளும், செப்டம்பரில் மெகா டிராபிக் செயற்கை கோளும், டிசம்பர் மாதம் மேகக்கூட்டங்களை துல்லியமாக படம் பிடிக்கும் ஆர்.1 சாட்.1 செயற்கை கோளும் ஏவப்படுகிறது. மேலும் மகேந்திரகிரியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3க்கு தேவையான சி-25, மற்றும் கிரையொஜனிக் என்ஜின் சோதனை மையமும் அடுத்த 2 மாதங்களில் செயல்படத்துவங்கும் என்று அவர் தெரிவித்தார்.
பதிவு செய்தது ErodeTimes
on 6/18/2011 09:23:00 AM.
Filed under
feature,
sciencenews
.
You can follow any responses to this entry through the RSS 2.0