விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்- நாமக்கல் அருகே பரபரப்பு
news, tamilnadu 5/31/2011 09:38:00 AM
நாமக்கல் அருகே விவசாய நிலத்தில் ஆறு அடி ஆழம், ஒன்றரை அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இது, தானியக்கிடங்கு அல்லது புதைக்குழியாக இருக்கலாம் என, ஆய்வு மேற்கொண்ட தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், ராஜவீரப்பன் மகன் திருப்பதி என்பருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில், புளிச்சை கீரை, குச்சி ஆகியவற்றை சாகுபடி செய்தும், தென்னை மரம் வைத்து பராமரித்து வருகிறார்.நேற்று முன்தினம், மாடு கட்டுவதற்காக வேலையாட்கள் மூலம் கம்பு அடித்துள்ளார். அப்போது, நின்று கொண்டிருந்த மாட்டின் கால், திடீரென பூமியில் புதைந்தது. அதிர்ச்சியடைந்த திருப்பதி, அங்கு பார்த்தபோது பூமியில் திடீர் குழி ஏற்பட்டிருந்தது.தகவலறிந்த தாசில்தார் திருஞானம், வி.ஏ.ஓ., அலமேலு மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின், அதுகுறித்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட குழியால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.