Ads

வரி ஏய்ப்பாளர்களை அம்பலப்படுத்த வருமான வரித்துறையின் அதிரடி திட்டம்

வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை, பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்த, வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு வருமான வரியாக இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களிடமிருந்து, வருமான வரியை வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. வரி ஏய்ப்பாளர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது பற்றியோ, அவர்களது சொத்து விவரம் பற்றியோ முழு விவரம் தெரியாததால், நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. 

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் பினாமிகள் பெயரில் சொத்துகளை உருவாக்கி, வருமான வரித்துறையினரின் கண்ணிலிருந்து தப்பி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காக, யார் யார் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன? என்பது குறித்து அறிவதற்காக, பத்திரிகைகளில் அவர்களை பற்றி விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், அவர்களது பினாமிகள் யார் யார்? அவர்களிடம் உள்ள சொத்து விவரங்களை அறிந்து கொள்ள வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து, அவர்கள் பற்றிய தகவல்களை தருபவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாத்து வைப்பதோடு, அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது. 

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொத்து விவரங்களை, வருமான வரித்துறையினரால் முழுமையாகக் கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கு தொடர் வருமானம் தரக்கூடிய சொத்துகளை தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் காட்டி, வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் வரையில் வருமான வரித்துறைக்கு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 32 கோடி ரூபாய் வரியாக வர வேண்டியுள்ளது. 

இதில், 9 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வசூலிக்க ஆட்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 92 ஆயிரத்து 360 கோடியை வசூலிப்பதற்கு எவ்வித சொத்துகளும் இல்லாமல் உள்ளது. எனவே, வரி ஏய்ப்பவர்களிடமிருந்து வரியை வசூல் செய்வதற்காக, அவர்களது சொத்துகளை கண்டறிவதற்குத் தான் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் டில்லியில் நடந்த வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், இதில் உள்ள சாதக, பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை தடுக்க சிறப்பு விசாரணை பிரிவு: வரி தொடர்பான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பது, அவர்கள் மீதான கோர்ட் நடவடிக்கைகளை முடிவு செய்ய, வருமான வரித்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பதுக்குபவர்கள் பற்றியும், சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது நேரடி வரி சட்டத்தின் கீழ் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை இயக்குனரகத்தில் குற்ற விசாரணைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. 


இது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது; அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி இந்த சிறப்பு விசாரணைப் பிரிவு ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 05:12:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for வரி ஏய்ப்பாளர்களை அம்பலப்படுத்த வருமான வரித்துறையின் அதிரடி திட்டம்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h