தொழில் முனைவோர் நண்பர் திட்டம் ஆலோசனை பெற அழைப்பு
news 5/30/2011 12:23:00 PM
ஈரோட்டில் "ராஜிவ்காந்தி உதய மித்ரா யோஜனா திட்டம்' தொடர்பாக ஆலோனை பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விஞ்ஞானம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும், ராஜீவ்காந்தி தொழில் முனைவோர் நண்பர், "ராஜிவ்காந்தி உதயமி மித்ரா யோஜனா' திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் நண்பராக, மகாகவி பாரதியார் விஞ்ஞானம் மற்றும் கல்வி அறக்கட்டளை செயலாளர் தறுகணன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்தின் செயல்பாடு, தொழில் முனைவோருக்கு தொழில் துவங்க ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதாகும். தொழிலைத் தேர்ந்தெடுத்தல், சிறு தொழில் சான்றிதழ், தொழில் அமைக்க தேவையான மத்திய, மாநில அரசின் நிதி சலுகை திட்டங்களை தேர்வு செய்ய உதவுதல், திட்ட அறிக்கை தயார் செய்ய உதவுதல், மத்திய, மாநில அரசு துறைகளில் அனுமதி சான்றிதழ் பெற உதவுதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல், டிரேட் மார்க் பெற உதவுதல் போன்ற பணிகள் நடக்கிறது. நிறுவன பதிவுகள் பற்றிய ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் நிறுவன மேலாண்மைக்கு ஆலோசனை வழங்குதல், குறிப்பாக ஒரு நிறுவனம் துவங்குவதற்கும், நடைமுறைப்படுத்தி மேம்பாடு அடையும் வரை ஏற்படும் அனைத்து செயல்பாட்டு சந்தேகங்களுக்கும் ஆலோசனை வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் விபரங்களுக்கு, செயலாளர், மகாகவி பாரதியார் விஞ்ஞானம் மற்றும் கல்வி அறக்கட்டளை, 43 ஸ்டேட் வங்கி ரோடு, ஈரோடு 1 என்ற முகவரி தொடர் புகொள்ளலாம்.